DEPARTMENT PROFILE
தமிழ்த்துறை
Sri Vasavi College, Erode
தமிழ்த்துறை 1967 ஆம் ஆண்டு ஸ்ரீ வாசவி கல்லூரி தொடங்கப் பெற்ற காலத்திலிருந்து இயங்கி வருகிறது. தமிழ்த்துறையில் அனுபவமிக்க பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாநில அரசு பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தின்படி பகுதி I மொழிப்பாடம் செயல்பட்டு வருகிறது. மேலும் பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வும் தமிழ்த்துறையில் இயங்கி வருகின்றது. இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
தமிழ்த்துறையின் பிற செயல்பாடுகள்
மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்தும் விதமாகக் கல்லூரிக்கு வருகை புரியும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மொழித்திறன் பயிற்சிவகுப்பு தமிழ்த்துறையின் சார்பாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்ப்பேரவையின் சார்பாக முன்னாள் முதல்வர்களாகிய கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, கவிஞர் கண்ணதாசன், ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தன், சுகிசிவம், வை.கோ, O.K நல்லமுத்து, கவிஞர் நந்தலாலா, ஆண்டாள் பிரியதர்ஷினி, ஜீவானந்தம், நாஞ்சில் நாடன் கவிஞர் அறிவுமதி, ஆதவன் தீட்சண்யா, பக்தவச்லபாரதி, போன்ற புகழ்பெற்ற தமிழ் ஆளுமைகள் நம் கல்லூரிக்கு வருகை புரிந்து சொற்பொழிவாற்றியுள்ளனர்.
வருடந்தோறும் பாரதியின் நினைவைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் பாரதியின் புகழை வெளிக்கொணரும் விதமாக மாணவர்களுக்குப் போட்டிகளையும் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வருகின்றது.
தாய்மொழியின் சிறப்பை மாணவர்களுக்கு உயிர்ப்பூட்டும் விதமாக உலகத் தாய்மொழிநாள் ஒவ்வொரு வருடமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
மாணவர்களின் பல்துறை ஆற்றல்களை மேம்படுத்தும் விதமாக தமிழ்த்துறையின் சார்பாக கட்டுரை, கவிதை, பேச்சு, ஓவியம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி மாணவர்களின் ஆளுமைத் திறனை வளர்த்து வருகின்றது. மேலும் அரசு நடத்தும் விழாக்களுக்கான போட்டிகளில் மாணவர்களை ஊக்குவித்தும் பயிற்சியளித்தும் பங்குபெறச் செய்கின்றது. போட்டிகளில் பங்கு பெறும் மாணவ மாணவிகள் தமிழக முதல்வர் முன்னிலையிலும், மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையிலும் பரிசுகளைப் பெற்று பெருமை தேடித்தந்துள்ளனர். மேலும் பரிசாகப் பணப்பயன்களையும் பெற்று பயனடைந்து வருகின்றனர். பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் 'இளம் பாரதி" விருதினை மாணவ மாணவிகள் பெற்று தமிழ்த்துறைக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.
அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளைத் தமிழ்த்துறை நடத்தி வருகின்றது.
தமிழ்த்துறை பேராசிரியர்களின் செயல்பாடு
தமிழ்த்துறை தொடங்கிய நாளிலிருந்து தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் குறுந்திட்ட ஆய்விற்கு தமிழ்த்துறை பேராசிரியர்கள் நால்வரின் ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருந்து 7.6 இலட்சம் நிதி பெறப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தமிழ் இலக்கியப் படைப்பாற்றல் திறனை தமிழ் உலகிற்கு வெளிப்படுத்தும் பொருட்டு, அவர்களின் கவிதைகளைத் தொகுத்து, தமிழ்த்துறையின் சார்பாக 'ஆசிரியப் பா" எனும் நூலாக வெளியிடப்பட்டது.
இவை போன்ற மாணவர்களின் நலன் குறித்த ஆக்கப்பணிகளை ஸ்ரீ வாசவி கல்லூரியின் தமிழ்த்துறை முனைப்போடு செயல்படுத்தி வருகின்றது.
தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்:
1.முனைவர் க.மலர்விழி - இணைப்பேராசிரியர் மற்றும் முதல்வர் (பொறுப்பு)
2.முனைவர் ப.சசிகலா - இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத்தலைவர்(பொறுப்பு)
3. முனைவர் சா.தங்கமணி - உதவிப்பேராசிரியர்
